நெல், பருத்தி, மக்காச்சோள பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம்


நெல், பருத்தி, மக்காச்சோள பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம்
x
தினத்தந்தி 17 Oct 2023 6:45 PM GMT (Updated: 17 Oct 2023 6:47 PM GMT)

நெல், பருத்தி மற்றும் மக்காச்சோள பயிருக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்(பொறுப்பு) சுந்தரம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்(பொறுப்பு) சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வாழ்வாதாரத்தை மீட்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கு சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் பயிர் காப்பீடு அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்த நெல்(சம்பா), மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்.

விவசாயிகள் தங்கள் பயிர்கள் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு நஷ்ட ஈடு பெற்று வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டில் சிறப்பு பருவத்தில் அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் நெல்(சம்பா) பயிருக்கு அடுத்த மாதம்(நவம்பவர்) 15-ந் தேதி வரையிலும், மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிர்களுக்கு இந்த மாதம் 31-ந் தேதி வரையிலும் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம்.

கட்டண விவரம்

காப்பீட்டு கட்டணம் ஏக்கருக்கு நெல் பயிர் ரூ.487, மக்காச்சோளம் ரூ.296, பருத்தி ரூ.484 காப்பீட்டுத் தொகையை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு நடப்பு பருவ அடங்கல் (பசலி ஆண்டு 1433), சிட்டா, வங்கி அட்டை கணக்கு புத்தகம், ஆதார் ஆகிய ஆவணங்கள் தேவை.

பதிவு செய்யும் போது விவசாயின் முகவரி, நில பரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக கவனித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். எனவே பயிர் காப்பீடு திட்டத்தில் சோ்ந்து விவசாயிகள் பயன்பெறலாம்,

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story