தாளடி நாற்று பறிப்பு பணியில் விவசாயிகள் தீவிரம்


தாளடி நாற்று பறிப்பு பணியில் விவசாயிகள் தீவிரம்
x

தாளடி நாற்று பறிப்பு பணியில் விவசாயிகள் தீவிரம்

தஞ்சாவூர்

ஆலக்குடி பகுதியில் தாளடி நாற்று பறிப்பு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறுவை சாகுபடி

நடப்பாண்டு முன்கூட்டியே மே மாதத்திலேயே குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் மும்முரம் காட்டினர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி குறுவை சாகுபடி நடந்தது. மழையால் பாதிப்புகள் இருந்தாலும் குறுவை அறுவடையை விவசாயிகள் முடித்தனர்.

தஞ்சை மாவட்டம் ஆலக்குடி பகுதியில் தாளடி சாகுபடிக்காக நாற்று விட்டு அதை பறித்து கட்டும் பணிகளில் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தீவிரம் காட்டினர். ஒரு சில விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடி செய்யும் நிலையில், பலர் தாளடி சாகுபடியில் இறங்கி உள்ளனர்.

நாற்று பறிப்பு பணி

இதுகுறித்து விவசாயிகள் கூறியிருப்பதாவது:-

குறுவை நெல் போட்டு இப்போதுதான் அறுவடை முடிந்து விற்பனை செய்தோம். அடுத்ததாக தாளடி சாகுபடிக்காக 50 விதை தெளித்து நாற்று விட்டோம். நாற்று நன்றாக வளர்ந்துள்ள நிலையில் ஆட்களை விட்டு பறித்து கட்டும் பணி நடக்கிறது. நாளை காலை வயலில் தாளடி நாற்றுக்கள் நடப்படும். 140 நாட்கள் வயதுடைய ரகத்தை சாகுபடி செய்துள்ளோம். தை மாதம் இறுதியில் அறுவடைக்கு தயாராகி விடும்.

மாசியில் அறுவடை செய்வோம். தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் இப்போதே பணிகளை தொடங்கி விட்டோம். இனி இப்பகுதியில் உள்ள மற்ற விவசாயிகளும் சாகுபடி பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கி விடுவர். இதனால் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும். அதனால்தான் தீபாவளி முடிந்த உடனேயே சாகுபடி பணிகளை ஆரம்பித்து விட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story