டிராக்டரில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி


டிராக்டரில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி
x

பழனி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார். ‘லிப்ட்’ கேட்டு பயணித்தவருக்கு நிகழ்ந்த சோகம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்

பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 40). விவசாயி. நேற்று இவர் வேலை சம்பந்தமாக பாப்பம்பட்டியை அடுத்த நரிப்பாறைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஊருக்கு செல்வதற்காக நரிப்பாறையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது பாப்பம்பட்டியை சேர்ந்த அப்பாச்சி (50) என்பவர் டிராக்டரை ஓட்டி வந்தார். அவரிடம் செல்லமுத்து, 'லிப்ட்' கேட்டு டிராக்டரில் ஏறி பாப்பம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். லட்சுமாபுரம் பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக டிராக்டரில் இருந்து செல்லமுத்து தவறி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது டிராக்டர் டயர் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே செல்லமுத்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் செல்லமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story