சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - தொழிலாளர்கள் இல்லாததால் விபரீதம் தவிர்ப்பு


சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - தொழிலாளர்கள் இல்லாததால் விபரீதம் தவிர்ப்பு
x

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட நாரணாபுரம் கிராமத்தில் செல்லையநாயக்கன்பட்டி ரோட்டில் ராஜாராம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் கடந்த சனிக்கிழமை மாலை வழக்கம்போல் பணிகள் முடிந்த நிலையில் ஊழியர்கள் வெளியே சென்று விட்டனர்.

இந்தநிலையில் இரவு 12.45 மணிக்கு அங்கு பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் வைத்திருந்த அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை தரைமட்டமானது. மேலும் இந்த அறை அருகில் இருந்த மற்றொரு அறையும் சேதம் அடைந்தது. விபத்து நடந்த போது அங்கு தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

பட்டாசு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளை மீதம் வைத்து விட்டு சென்ற நிலையில் அது வேதியியல் மாற்றம் அடைந்து வெடி விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து நாரணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ரேவதி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் ஆலையின் உரிமையாளர் ராஜாராம், போர்மென் கருப்பசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story