ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாளை காலை செய்தியாளர்களை சந்திக்கும் ஓபிஎஸ் - முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு...!


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாளை காலை செய்தியாளர்களை சந்திக்கும் ஓபிஎஸ் - முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு...!
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா சமீபத்தில் காலமானார். இதையடுத்து, அந்த தொகுதி காலியாக இருந்த நிலையில் அடுத்த மாதம் 27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. இடைத்தேர்தலில் பதிவாகும் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அறிவித்துள்ளார்.

அதேவேளை, அதிமுக கூட்டணியில் இடைத்தேர்தலில் யார் போட்டியிவார் என்று இதுவரை முடிவாகவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலும் இடைத்தேர்தலில் வேட்பாளர் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக தற்போது இந்த இடைத்தேர்தலில் போட்டியிட மும்முரம் காட்டி வருகிறது. இதனால், அதிமுக - பாஜக கூட்டணி ஏற்படுமா? இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக தனித்து போட்டியிடுமா? அல்லது இணைத்து ஒரு வேட்பாளரை நிறுத்துமா? என்று அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நிலையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ள நிலையில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தில் களமிறங்குமா? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா?, வேட்பாளர் யாரேனும் நிறுத்தப்படுவாரா?, கூட்டணி அமைக்கப்படுமா? உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு மற்றும் முடிவை ஓ.பன்னீர் செல்வம் நாளை செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓ.பன்னீர் செல்வம் நாளை காலை 8 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக அரசியல் களத்தில் பரபரப்பு தொடங்கிவிட்டது.


Next Story