பளுதூக்கும் விளையாட்டு பயிற்சியாளருக்கு வேலைவாய்ப்பு


பளுதூக்கும் விளையாட்டு பயிற்சியாளருக்கு வேலைவாய்ப்பு
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் பளுதூக்கும் விளையாட்டு பயிற்சியாளர்கள் வேலைவாய்ப்பு பெற வருகிற 6-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்டத்தில் பளுதூக்கும் விளையாட்டு பயிற்சியாளர்கள் வேலைவாய்ப்பு பெற வருகிற 6-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

விளையாடு இந்தியா

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் "விளையாடு இந்தியா" திட்ட நிதியுதவியில் தொடக்க நிலை பளு தூக்குதல் பயிற்சிக்கான விளையாட்டு இந்தியா மாவட்ட மையம் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி எஸ்.எம்.எச். மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதிற்கு உள்பட்ட பளுதூக்குதல் வீரர், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்றவராகவோ அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, தேசிய அளவிலான போட்டிகளில் அல்லது கேலோ இந்தியா போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்துகொண்டவராகவோ இருத்தல் வேண்டும்.

மாதாந்திர பயிற்சி கட்டணம் ரூ.25 ஆயிரம்

தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளர்களுக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சி கட்டணமாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகையோ நிரந்தப்பணியோ கோர இயலாது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மயிலாடுதுறை பிரிவு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் வருகிற 6.3.2023-ந்தேதி மாலை 5 மணிக்குள் தங்களின் விண்ணப்பம், ஆதார் அட்டை அல்லது கடவுச்சீட்டு மற்றும் பான் கார்டு இணைத்து சமர்பிக்க வேண்டும். பிற வழிகளில் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு மயிலாடுதுறை, ராஜன் தோட்டம், இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வு தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story