கல்லலில் பள்ளிக்கூடம், கோவில் அருகே இடமாற்றம் செய்யப்பட்ட மதுக்கடை வேறு இடத்துக்கு மாற்ற வியாபாரிகள் சங்க பேரவையினர் வலியுறுத்தல்


கல்லலில் பள்ளிக்கூடம், கோவில் அருகே இடமாற்றம் செய்யப்பட்ட மதுக்கடை வேறு இடத்துக்கு மாற்ற வியாபாரிகள் சங்க பேரவையினர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 April 2023 6:45 PM GMT (Updated: 11 April 2023 6:45 PM GMT)

கல்லலில் பள்ளிக்கூடம், கோவில் அருகே மதுக்கடை இடமாற்றம் செய்யப்பட்டது. அந்த மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வியாபாரிகள் சங்க பேரவையினர் வலியுறுத்தி உள்ளனர்.

சிவகங்கை

கல்லல்

கல்லலில் பள்ளிக்கூடம், கோவில் அருகே மதுக்கடை இடமாற்றம் செய்யப்பட்டது. அந்த மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வியாபாரிகள் சங்க பேரவையினர் வலியுறுத்தி உள்ளனர்.

அரசு மதுக்கடை

காரைக்குடி அருகே கல்லல் பஸ்நிலையம் எதிரே உள்ள தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த அரசு மதுக்கடை கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லல் சந்தை பேட்டை பகுதிக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது. மேலும் இந்தப் பகுதியில் பள்ளி மற்றும் கோவில் இருப்பதால் இந்த கடை இடமாற்றத்தை ரத்து செய்து வேறு ஊருக்கு ஒதுக்குப்புறமாக கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்களும், அனைத்து கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து அ.தி.மு.க., பாரதீய ஜனதா கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி உள்பட அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் திரண்டு வந்து இப்பகுதியில் மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிக்குமாரிடம் புகார் மனு கொடுத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கல்லல் வருவாய் ஆய்வாளர் காரைக்குடி தாசில்தார் தங்கமணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தாசில்தார் தங்கமணி மற்றும் வருவாய்த்துறையினர் கல்லல் வந்து இடமாற்றம் செய்யப்பட்ட மதுக்கடை பகுதியில் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

கோாிக்கை மனு

அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள், தற்போது உள்ள கடை வாசலில் குடிநீர் குழாய் உள்ளதால் அந்த பகுதிக்கு சென்று குடிதண்ணீர் எடுத்து வர முடியவில்லை எனவும், மதுக்கடையால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என கூறி அந்த கடையை அங்கிருந்து மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாசில்தாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாயன் ரமேஷ் தலைமையில் மாநில மகளிரணி செயலாளர் விக்டோரியா பாக்கியராஜ், மாநில துணைத்தலைவர் தங்க முருகன், சிவகங்கை மாவட்ட வக்கீல் பிரிவு சரவணன், மாவட்ட தலைவர் வேல்முருகன், மாவட்ட மகளிரணி செயலாளர் ராம்செல்வி, காரைக்குடி நகரத் தலைவர் பாண்டி செல்வம், ஒன்றிய செயலாளர் பாண்டி உள்பட பேரவை நிர்வாகிகள் தாசில்தாரிடம் மதுக்கடையை இடமாற்றம் செய்யக் கோரி கோரிக்கை மனுவை வழங்கினர். மனுவைப் பெற்றுக் கொண்ட தாசில்தார் இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


Next Story