மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்


மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
x
தினத்தந்தி 30 March 2023 6:45 PM GMT (Updated: 30 March 2023 6:46 PM GMT)

திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே நெடுமறம் கிராமத்தில் உள்ள மலையரசி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் 2 மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு இந்த ஆண்டு தமிழக அரசின் வழிகாட்டுதலோடு தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு நேற்று 2-வது மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதையடுத்து தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று மஞ்சுவிரட்டை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் துணை சூப்பிரண்டு ஆத்மநாபன், தாசில்தார் வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார் செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தொழுவில் 120 மாடுகள் பதிவு செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது. அவை சீறி பாய்ந்தன. இந்த மஞ்சுவிரட்டில் 50 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்க முயன்றனர். முன்னதாக மலையரசிஅம்மன் கோவிலில் இருந்து கோவில் காளையுடன் ஊர்வலமாக தொழுவிற்கு வந்தனர். மேலும் நேற்று காலை கட்டுமாடுகளாக நெடுமறம் வயல்வெளி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. இதையடுத்து அங்கு திரண்டிருந்தவர்கள் இந்த காளைகளை அடக்க முயன்றனர். இதில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைய அரசு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக 2 பேரை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story