கடைவீதிகளில் கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி


கடைவீதிகளில் கூட்ட நெரிசலால்   வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
x

கடைவீதிகளில் கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

தஞ்சாவூர்

தஞ்சை கடைவீதிகளில் தீபாவளி பண்டிகைக்காக துணி வாங்க வருபவர்கள் என கூட்டம் அலைமோதுகிறது. கடைவீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே போக்குவரத்து மாற்றம் செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, புத்தாடை, பலகாரம் தான் நினைவுக்கு வரும். இந்துக்களின் பண்டிகையான தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பே கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கி விட்டது.

ஜவுளி எடுக்க, மளிகை பொருட்கள் வாங்குவதற்கு, பட்டாசு வாங்குவதற்கு என்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தஞ்சை கடைவீதிகளில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்படுகிறது. தஞ்சை இர்வீன்பாலத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் சாலை, தெற்கு அலங்கம், கீழராஜவீதி, அண்ணா சிலையில் இருந்து கீழவாசல் செல்லும் சாலையில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

அலைமோதும் மக்கள் கூட்டம்

சாலையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளிக்கிறது. மேலும் சாலையோரத்தில் தரைக்கடைகளும் ஆங்காங்கே போடப்பட்டுள்ளன. இதனால் காந்திஜி சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் இந்த சாலை வழியாகத்தான் செல்கிறது.

இது தவிர இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களும் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றன. தரைக்கடைகள் மற்றும் மக்கள் கூட்டம் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றன. இதனால் காந்திஜி சாலையை கடக்க அரைமணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

போக்குவரத்து திருப்பி விடப்படுமா?

இது ஒருபுறம் இருக்க பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவர்கள் சாலையின் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு செல்வதற்கும் காத்திருந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் ஆங்காங்கே தள்ளுவண்டி கடைகளும் போடப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகமாக உள்ளது. எனவே பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட வேண்டும்.

காந்திஜி சாலையில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்லும் வகையில் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட வேண்டும். அவ்வாறு செய்தால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படுவதோடு, மக்களும் சிரமம் இன்றி கடைவீதிகளுக்கு சென்று பொருட்களை வாங்கி செல்ல முடியும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.


Related Tags :
Next Story