போதைப்பொருள் ஒழிப்பு: காவல்துறையில் 5 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் அறிவிப்பு


போதைப்பொருள் ஒழிப்பு: காவல்துறையில் 5 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Jun 2023 7:02 AM GMT (Updated: 25 Jun 2023 9:32 AM GMT)

காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு 2023ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு 2023ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய 5 காவலர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

"தமிழக முதலமைச்சர் அவர்கள் 09.05.2022 அன்று சட்டப்பேரவையில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையிலன் போது "சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள் / காவலர்களை ஊக்குவிப்பதற்கென மாண்புமிகு முதலமைச்சரின் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என அறிவித்தார்.

அதனை தொடர்ந்து அரசாணை எண் 411, உள்( மிக)த் துறை, நாள் 03.08.2022 அன்று வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக காவல் துறை தலைமை இயக்குநரின் பரிந்துறைக்கேற்ப கீழ்கண்டகாவல் அதிகாரிகள் / ஆளிநர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்பகிறது"

1. திரு.வெ.பத்ரிநாராயணன், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்டம்.

2. திரு.டோங்கரே பிரவின் உமேஷ். இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர். தேனி மாவட்டம்

3. திரு.மா.குணசேகரன், காவல் துணை கண்காணிப்பாளர், இருப்பு பாதை, சேலம் உட்கோட்டம்.

4. திரு.சு.முருகன், காவல் சார்பு ஆய்வாளர், நாமக்கல் மாவட்டம்

5. திரு.இரா.குமார். முதல் நிலை காவலர்-1380. நாமக்கல் மாவட்டம்

போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் திரு அஸ்ரா கர்க், இ.கா.ப., காவல்துறைத் தலைவர், தென் மண்டலம், மதுரை, அவர்களின் சீரிய பணியை அங்கீகரித்து அவர்களுக்கு ரொக்கப் பரிசு இல்லாமல், இந்த "சிறப்பு பதக்கம்" தனி நேர்வாக வழங்கப்படுகிறது.

திரு அஸ்ரா கர்க், இ.கா.ப., அவர்களின் தனிப்பட்ட முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு மிகுந்த கண்காணிப்பின் மூலம் போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டம், (NDPS Act) சட்டத்தின் கீழ் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டள்ளன. மூத்த அதிகாரிகளுக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார் மற்றும் 2022–2023ல் 1843 நபர்கள் பிணைக்கப்பட்டுள்ளனர். இது சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கியது. விருதுகள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களால் சுதந்திரதின விழாவில் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story