முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்
x

வருகிற 4-ந்தேதி திருச்சி வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி

வருகிற 4-ந்தேதி திருச்சி வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயல்வீரர்கள் கூட்டம்

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க. தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவை தி.மு.க.வின் முதன்மை செயலாளராக 2-வது முறையாக தேர்ந்தெடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியையும், கே.என்.நேருவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வது. வருகிற 4-ந்தேதி திருச்சி மத்திய மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி மணப்பாறை கிழக்கு ஒன்றியத்திலுள்ள தமிழ்நாடு காகித ஆலை 2-வது யூனிட்டை தொடங்கி வைக்க திருச்சி வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தும் பின்னர் அவர் கலந்து கொள்ளும் மற்ற நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான கழகத்தினர் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

பூத் கமிட்டி

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றிடும் வகையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணியினை விரைவாக தொடங்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் புதிதாக வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் இதர பணிகளுக்கு சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருகிற 12,13 மற்றும் 26, 27-ந்தேதிகளில் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாமில் கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் மாவட்ட, மாநகர அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

துறையூர்

இதேபோல் துறையூரில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் அவை தலைவர் அம்பிகாபதி தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் ஸ்டாலின் குமார் (துறையூர்), கதிரவன் (மண்ணச்சநல்லூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் கலைஞர் அறிவாலயம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார். கூட்டத்தில் ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story