தி.மு.க.பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை


தி.மு.க.பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
x

கந்தர்வகோட்டை அருகே தி.மு.க. பிரமுகரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை

தி.மு.க. பிரமுகர்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சைவராஜ் (வயது 75), தி.மு.க. பிரமுகர். இவரது மகள் லதா. இவருடைய கணவர் ரவிச்சந்திரன் (53). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணம் நடைபெற்று கணவருடன் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் ரவிச்சந்திரனுக்கும், அவருடைய மனைவி லதாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர்கள் கடந்த 8 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

காவலாளி

ரவிச்சந்திரன் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று சில மாதங்கள் வங்கியில் காவலாளியாக பணியாற்றி வந்தார். தற்போது அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் ஒன்றில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். மேலும் அவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.

இந்தநிலையில் 2-வது மகள் யாரிடம் இருப்பது தொடர்பாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி தாயிடம் 2-வது மகள் இருக்க உத்தரவிட்டார்.

குண்டு பாய்ந்து பலி

இதனைத்தொடர்ந்து அனைவரும் புதுக்கோட்டையில் இருந்து கந்தர்வகோட்டைக்கு சென்று பின்னர் அங்கிருந்து அவர்களது சொந்த ஊரான வடுகப்பட்டி கிராமத்திற்கு பஸ்சில் சென்றனர். சைவராஜ் தனது மகன் முருகேசனுடன் (42) சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த ரவிச்சந்திரன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

இதில் தலை மற்றும் மார்பு பகுதியில் குண்டு பாய்ந்து சைவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இதனை தடுக்க வந்த முருகேசனின் வலது காலில் ரவிச்சந்திரன் கட்டையால் தாக்கினார். இதில் அவரது கால் முறிந்தது.

சாலை மறியல்

இந்த சம்பவத்ைத கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து ரவிச்சந்திரனை பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த முருகேசனை மீட்டு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதையடுத்து, இறந்த சைவராஜின் உடலை எடுக்க விடாமல் கிராம மக்களும், அவரது உறவினர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கைது

இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ராகவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் சைவராஜின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, கந்தர்வகோட்டை போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்தனர். மேலும் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story