கருணாநிதி நினைவுநாளை முன்னிட்டு 7-ந் தேதி அமைதி பேரணி தி.மு.க. அறிவிப்பு


கருணாநிதி நினைவுநாளை முன்னிட்டு 7-ந் தேதி அமைதி பேரணி தி.மு.க. அறிவிப்பு
x

திமுக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி அமைதிப் பேரணி நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

சென்னை,

தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்ணாவின் மறைவுக்கு பிறகு, தி.மு.க. தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக்கொண்டவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி.

அவரது 4-வது நினைவுநாளையொட்டி தமிழக முதல்-அமைச்சரும், கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்ட கட்சியின் முன்னணியினர் கலந்து கொள்ளும் "அமைதிப் பேரணி" வருகிற 7-ந் தேதி நடைபெற உள்ளது.

அன்று காலை 8.30 மணிக்கு சென்னை அண்ணா சாலை, ஓமந்தூரர் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகில் இருந்து புறப்பட்டு காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர், கட்சி நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.

இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கருணாநிதியின் நினைவு போற்றி அஞ்சலி செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story