விதிகளை மீறி ஜவுளி உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்கள் மீது நடவடிக்கை


விதிகளை மீறி ஜவுளி உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Aug 2023 6:45 PM GMT (Updated: 6 Aug 2023 6:46 PM GMT)

விதிகளை மீறி ஜவுளி உற்பத்தி, விற்பனை செய்யும் விசைத்தறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை

விதிகளை மீறி ஜவுளி உற்பத்தி, விற்பனை செய்யும் விசைத்தறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

கைத்தறி ரகங்கள்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- கைத்தறி தொழிலை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் கைத்தறி வளர்ச்சி ஆணையர் மூலம் அமல்படுத்தப்பட்ட கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம், தமிழக அரசின் கைத்தறி ஆணையர் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சட்டம் பிரத்யேகமாக கைத்தறியில் மட்டுமே உற்பத்தி மேற்கொள்வதற்காக 11 ரகங்கள் சட்டத்தில் விவரித்துள்ளபடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பேட்டு பார்டருடன் கூடிய சேலை, பேட்டு பார்டருடன் கூடிய வேட்டி, துண்டு மற்றும் அங்கவஸ்தரம், லுங்கி, போர்வை, படுக்கை விரிப்பு, அலங்கார துணி ஜமுக்காளம், உடை துணி, கம்பளி, சால்வை, உல்லன் ட்வீட், சத்தார்க் போன்ற ரகங்கள் விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் நோக்கில் கைத்தறி துறையால் தற்போது அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர், மாவட்டத்தில் உள்ள விசைத்தறி கூடங்கள், தனியார் ஜவுளி விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

சட்டத்துக்கு புறம்பாக

சட்டத்துக்கு புறம்பாக ஜவுளி ரகங்கள் உற்பத்தியில் ஈடுபடுதல் அல்லது விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளை கண்டறியும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும், தனியாரிடம் கூலிக்கு நெசவு செய்து வரும் கைத்தறி நெசவாளர்களின் இடர்பாடுகளை களைந்திடும் வகையில், தனியார் நெசவாளர்கள் வாழ்ந்து வரும் பகுதிக்கு அருகே உள்ள ஏதேனும் ஒரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து தொடர்ச்சியாக வேலை வாய்ப்பும், அதற்கான ஊதியமும் பெற்று பயனடைய வேண்டும்.

கைத்தறிக்கு என ஒதுக்கப்பட்ட 11 வகை ரகங்கள் குறித்து விளக்கம் பெற மதுரை மாவட்டத்தில் 21/9, கக்கன் தெரு, செனாய் நகரில் உள்ள உதவி அமலாக்கபிரிவு அலுவலகத்தை அணுகலாம். அல்லது சென்னை கைத்தறி ஆணையரக அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story