பாரம்பரிய நெல் விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகம்


பாரம்பரிய நெல் விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகம்
x
தினத்தந்தி 18 Sep 2022 6:45 PM GMT (Updated: 18 Sep 2022 6:45 PM GMT)

பாரம்பரிய நெல் விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

பெரம்பலூர்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பாரம்பரிய நெல் ரகங்கள் விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசால் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டாரங்களிலும் பாரம்பரிய நெல் ரகங்களான தூயமல்லி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுணி, ஆத்தூர் கிச்சலி சம்பா மற்றும் அறுபதாம் குறுவை போன்ற ரகங்கள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யும் பொருட்டு அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.25 நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் 1,100 கிலோ வினியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.

மொத்த விதையளவில் 80 சதவீதம் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 20 சதவீதம் பட்டியலின மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்படும். விவசாயி ஒருவருக்கு அதிகபட்சமாக ஏக்கர் ஒன்றுக்கு 20 கிலோ விதை மட்டுமே வழங்கப்படும். 'கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்' செயல்படுத்தப்படும் 30 கிராம பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்ட பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண் அலுவலர்கள் அல்லது வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி விதைகளை பெற்று பயனடையலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story