ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி


ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி
x

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், ரத்து செய்யக்கோரியும் ஆன்லைனில் சூதாட்ட விளையாட்டுகளை நடத்திவரும் தனியார் நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகளை தொடர்ந்தன.

இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் கொண்ட முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபில் ஆஜராகி, 'அவசர சட்டம் கொண்டுவரப்பட்டாலும், அந்த சட்டம் அமலுக்கு வரும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அவசர சட்டத்துக்கு பதிலாக சட்டப்பேரவையில் சட்டமே நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை தொடர முடியாது' என்று வாதிட்டார்.

நடவடிக்கை கூடாது

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் சி.ஆர்யமா சுந்தரம், முகுல் ரோத்தகி, சதீஷ் பராசரன் ஆகியோர் ஆஜராகி, 'அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அது அமலில் உள்ள சட்டமாகத்தான் கருத வேண்டும். அவசர சட்டத்துக்கு மாற்றாக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்துக்கு தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்த பிறகுதான் அந்த அவசர சட்டம் காலாவதியாகும். அவசர சட்டத்தின்படி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதால், அந்த சட்டம் அமலுக்கு வரும் தேதியில் இருந்து சில தினங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்' என்று வாதிட்டனர்.

தள்ளுபடி

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'அந்த அவசர சட்டம் இன்னும் அமலுக்கு வராத நிலையில், அதை எதிர்த்து வழக்குகளை எப்படி தொடர முடியும்?' என்று கேள்வி எழுப்பினர். அதையடுத்து மனுதாரர்கள் தரப்பில், இந்த வழக்கை வாபஸ் பெறுகிறோம். அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவித்த பிறகு புதிதாக வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்குகளை திரும்ப பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story