அரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறதா?


அரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறதா?
x

‘காத்துட்டா இருந்தாலும், அது கவர்மெண்ட் துட்டா இருக்கணும்', ‘அரசாங்க உத்தியோகம்னா, சும்மாயில்லே?' -இது போன்ற வாய்மொழிகள் இன்னமும் கிராமங்களில் வலம் வருகின்றன. பணி பாதுகாப்பு, சுதந்திரம், கணிசமான சம்பளம், பதவி உயர்வுக்கான வாய்ப்பு, ஓய்வு ஊதியம் போன்ற காரணிகளே, பொதுவாக ஒருவரை அரசு வேலைக்கு ஈர்ப்பதாக பார்க்கப்படுகிறது. ஒருகாலத்தில் அரசுத்துறைகளில் இருக்கும் பணிகளுக்கு ஆட்களை கூப்பிட்டு, கூப்பிட்டு கொடுத்து இருக்கிறார்கள். காலப்போக்கில் கல்வியறிவு அதிகரித்து, படித்து முடிக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்தது.

புதுக்கோட்டை

டி.என்.பி.எஸ்.சி.

அதன் பின்னர், தகுதியான நபர்களை தேர்வு செய்து பணியில் சேர்க்கும் முறை கடந்த 1929-ம் ஆண்டு வாக்கில் இருந்து தொடங்கி இருக்கிறது. முதலில் இந்த அமைப்புக்கு மெட்ராஸ் தேர்வாணையம் என்ற பெயர் இருந்த நிலையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பிறகு, 1957-ம் ஆண்டில் மெட்ராஸ் அரசு பணியாளர் தேர்வாணையம் என்றும், அதனைத் தொடர்ந்து, சென்னை மாகாணம், தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டபோது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) என்றும் மாறியது.

1954-ம் ஆண்டில் வகுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறை மற்றும் நடத்தை விதிகள் அடிப்படையில் இந்த ஆணையம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலமாகவே அரசுத்துறைகளில் அடிமட்ட அளவில் இருந்து உயர்மட்ட அளவில், பணியாளர்கள் முதல் அதிகாரிகள் வரையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் குரூப்-1, 2, 2ஏ, 3, 4 என பிரிவுகளாக பிரித்து நிரப்பப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் அரசுத்துறைகளில் ஓய்வு பெறுபவர்களின் காலிப்பணியிடங்கள், புதிதாக துறைகளில் தோற்றுவிக்கப்படும் இடங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு, அந்தந்த துறைகள் அளிக்கும் பட்டியல்களை கொண்டு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆண்டுத்திட்ட அட்டவணையை வெளியிட்டு வருகிறது. அந்த அட்டவணையில் குறிப்பிட்டு இருக்கும் காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்புகளை வெளியிடுவதோடு, அதற்காக விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்கு தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு என அனைத்து பணிகளையும் மேற்கொண்டு, அந்த பணிக்கு தகுதி வாய்ந்தவர்களை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு செய்து பணி வழங்குகிறது. தொழில்நுட்பங்கள் வளர, வளர அதற்கு ஏற்ப தேர்வு முறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. குறுக்குப்பாதைகளை தேடுபவர்கள் எங்கேதான் இல்லை? என்று சொல்லும் வகையில், இந்த தேர்வு முறைகளிலும் சிலர் முறைகேடுகளில் ஈடுபட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் அரங்கேறியது என்பது, மறுக்க முடியாத உண்மை.

வயது விலக்கு

அந்த சுவடுகள் மீண்டும் டி.என்.பி.எஸ்.சி. மீது பதிந்துவிடக்கூடாது என்ற நோக்கில், அதனை பொறுப்பேற்று முன்னெடுத்து செல்லும் அதிகாரிகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தற்போது அதுபோன்ற முறைகேடுகள் பற்றிய எந்த குற்றச்சாட்டுகளுக்கும் இடம் கொடுத்துவிடாதபடி, ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த எச்சரிக்கையுடன் தேர்வை நடத்தி வருகின்றனர்.

இதில் குரூப்-4, குரூப்-2, 2ஏ ஆகிய பிரிவுகளில்தான் அதிகமான பணியிடங்களும் இருக்கும். அதிகமான போட்டிகளும் இருக்கும்.

உதாரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட குரூப்-4 பணியிடங்களுக்கு இதுவரை இல்லாத வகையில் 21 லட்சத்து 85 ஆயிரத்து 328 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இது பெருமையா? என்று கேட்டால், இல்லை என்றே சொல்ல முடியும். ஏனென்றால், படித்து முடித்த இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு கிடைக்காமல் எவ்வளவு பேர் காத்துக்கிடக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணமாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக எதிர்பார்த்தபடி பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படாததால், அதிகப்பட்ச வயது வரம்பை கடந்தவர்களுக்காக, 2 ஆண்டுகள் வயது விலக்கு அளிக்கப்பட்டது. இந்த சலுகைகளை பெற்றவர்களுக்கு நடப்பு ஆண்டில் அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்களில் தேர்வு தான் கடைசி வாய்ப்பாக இருக்கும்.

அதிர்ச்சி அளிக்கிறது

அப்படி எதிர்பார்த்து காத்திருந்த பலருக்கு, டி.என்.பி.எஸ்.சி. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட ஆண்டுத்திட்ட போட்டித் தேர்வு அட்டவணை ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய குரூப்-2, 2ஏ, 3ஏ பதவிகளுக்கான அறிவிப்பு இல்லாதது, குரூப்-4 பணியிடங்களுக்கான காலி இடங்கள் எவ்வளவு? என்ற விவரங்கள் தெரிவிக்காதது அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றன. குரூப்-1 தேர்வுக்கு ஆகஸ்டு மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு நவம்பரில் முதல் நிலை, 2024 ஜூலையில் முதன்மை, டிசம்பரில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் எத்தனை பணியிடங்கள் என்ற விவரங்கள் இல்லாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டுகளில் இருந்து பார்க்கும்போது, ஆண்டுக்கு 23 ஆயிரம், 10 ஆயிரம், 9 ஆயிரம், 8 ஆயிரம் காலிப்பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்பட்டு வந்த நிலை மாறி, தற்போது ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் என்ற அளவிலேயே பணியிடங்கள் அறிவிக்கப்படுகின்றன.

சோளப்பொரி

இது யானை பசிக்கு சோளப்பொரி போல் அல்லவா தெரிகிறது? வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கானோருக்கு, ஆயிரத்தில் பணியிடங்கள் என்பது எப்படி சரியாக இருக்கும்?

அதிலும் இந்த ஆண்டு அறிவிப்பில் இதுவரை 1,754 காலிப்பணியிடங்கள் குறித்த தகவல் மட்டுமே டி.என்.பி.எஸ்.சி. அட்டவணையில் இடம்பெற்றிருப்பது, அரசுப்பணிகளில் சேரவேண்டும் என்ற ஆர்வத்தில் இரவு பகலாகப் படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது. இதுபற்றி தேர்வுக்கு தயாராகிவரும் தேர்வர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

காலிப்பணியிடங்களை அறிவிக்கவில்லை

விராலிமலையை சேர்ந்த பெரியசாமி:- ஒவ்வொரு ஆண்டும் டி.என்.பி.எஸ்.சி. மூலமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு 1,754 காலிப்பணியிடங்களை மட்டுமே டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. அதுவும் 2024-ம் ஆண்டு தேர்வு நடைபெறுவது போல் அறிவித்துள்ளது. இதனால் படித்த இளைஞர்கள் ஒரு ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் எப்போதும் குரூப்-1, குரூப்-2 காலிப்பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. அறிவிக்கும். ஆனால் இந்த ஆண்டு அதனை அறிவிக்கவில்லை. அதற்கு எதிர்ப்பு கிளம்பியதற்கு பிறகு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 புதுப்பித்த அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஆனால் அதில் எவ்வளவு காலிப்பணியிடங்கள் இருக்கிறது என்பதை வெளியிடவில்லை. பொதுவாக அனைத்து பட்டதாரிகளும் எழுதும் தேர்வுகளில் கூட இந்த ஆண்டு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதேபோல் கடந்த பட்ஜெட்டில் அனைத்து தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அதனைச்சார்ந்த நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலமாக நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதற்கான அறிவிப்பும் இந்த அட்டவணையில் இல்லை. எனவே இந்த தேர்வையே நம்பி படித்துக்கொண்டிருக்கும் பட்டதாரிகளின் எதிர்பார்பை டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை.

ஏமாற்றம் அளிக்கிறது

குரூப்-2 தேர்வுக்கு தயாராகி வரும் அறந்தாங்கியை சேர்ந்த வசந்தபிரியன்:- நான் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு கடந்த ஒரு ஆண்டாக குரூப்-2 தேர்வுக்கு படித்து வருகிறேன். இந்த ஆண்டு தேர்வு எழுதி வெற்றி பெற முடியும் என நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் தேர்வு நடத்தப்படாததால் ஏமாற்றம் அடைந்துள்ளேன். மேலும் அரசு துறைகளில் எந்த வேலை உள்ளது என அறிவிப்பு கூட இல்லாமல் உள்ளது. இது குரூப் தேர்வு எழுதும் நபர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

தேர்வு முடிவுகள்

விராலிமலை தாலுகா, மலம்பட்டியை சேர்ந்த குரூப்-2 தேர்வுக்கு தயாராகி வரும் நான்சி:- டி.என்.பி.எஸ்.சி. தேர்வு என்பது இன்றைய இளைஞர்களின் எதிர்கால கனவாக உள்ளது. அரசு வேலைக்கு செல்ல விரும்பும் தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக படித்து வருகிறார்கள். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த தேர்வு சரிவர நடைபெறாததால் தேர்வர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். மேலும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு மற்றும் பணி அமர்த்துதல் போன்ற முறைகளில் டி.என்.பி.எஸ்.சி. அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்வதால் தேர்வில் வெற்றி பெற்றாலும் பணியில் அமர்வதற்கு ஒரு ஆண்டு காலம் ஆகிறது. எனவே டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தேர்வு முடிவுகளை 3 மாத காலத்தில் வெளியிட வேண்டும். மேலும், வெற்றி பெற்ற தேவர்கள் பணியில் அமர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்

கறம்பக்குடியை சேர்ந்த எம்.சி.ஏ. பட்டதாரி அருண்ராஜ்:- படித்து பட்டம் பெற்ற அனைவரின் எதிர்கால கனவு அரசு வேலை என்பதுதான். அலுவலக உதவியாளர், சத்துணவு அமைப்பாளர் பணிகளுக்கு கூட முதுநிலை பட்டதாரிகளும், என்ஜினீயரிங் முடித்தவர்களும் போட்டி போடுவதில் இருந்து அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருப்பவர்களின் நிலையை புரிந்து கொள்ளலாம். ஆண்டுக்கு ஆண்டு அரசு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் அதற்கேற்ற வகையில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. கடந்த காலத்தில் போடப்பட்ட வேலை நியமன தடை சட்டம் போன்றவை படித்த இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விட்டது. தற்போது படித்தவர்களின் ஒரே நம்பிக்கை டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்தான். எனவே ஆண்டுதோறும் அரசு பணியில் ஏற்படும் காலியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும். இதற்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் இடைவெளி இன்றி நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

தேர்வர்கள் மத்தியில் அச்சம்

புதுக்கோட்டையை சேர்ந்த அரசு அதிகாரிகள் கூறியதாவது:- ''சமீபத்தில் வெளியிடப்பட்ட அட்டவணையில் குரூப்-4 தேர்வு பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட பல்வேறு அரசு பணியிடங்களுக்கு மொத்தமாக 10 ஆயிரம் பேர் வரை தேர்வு செய்யப்படுவார்கள். இதனால் இந்த தேர்வை எழுத இளைஞர்கள் மத்தியில் அதிகம் ஆர்வம் உண்டு. மேலும் இந்த தேர்வு எளிதாக இருக்கும் என்பதால் இதில் தனிக்கவனம் செலுத்தி தேர்வர்கள் படிப்பது உண்டு. தற்போது அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாததால் இத்தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் மத்தியில் ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு வராமல் போய்விடும். அல்லது அடுத்த ஆண்டு தேர்வு நடைபெறாமல் அதற்கு அடுத்த ஆண்டு (2024) தேர்வு நடைபெறுமோ? என்றெல்லாம் சந்தேகமடைந்து கேள்வி எழுப்புகின்றனர். இது தொடர்பாக அரசின் கவனத்திற்கும், அதிகாரிகள் தரப்பில் கொண்டு சென்றுள்ளனர். அதனால் இது பற்றி விரைவில் அறிவிப்பு எதுவும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது''.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story