திருவண்ணாமலையில் விளம்பரப்பலகை விழுந்தும், மின்சாரம் தாக்கியும் இறந்த என்ஜினீயரிங் மாணவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


திருவண்ணாமலையில் விளம்பரப்பலகை விழுந்தும், மின்சாரம் தாக்கியும் இறந்த என்ஜினீயரிங் மாணவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

திருவண்ணாமலையில் விளம்பரப்பலகை விழுந்தும், மின்சாரம் தாக்கியும் இறந்த என்ஜினீயரிங் மாணவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


நெல்லை சுத்தமல்லியைச் சேர்ந்த சுவாமிஜி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனது மகன் அங்கப்பன் என்ற விக்னேஷ், என்ஜினீயரிங் படித்து வந்தார். 14.5.2014 அன்று பவுர்ணமியையொட்டி, அவர் தனது நண்பர்களுடன் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றார். இரவு 10.45 மணி அளவில் கிரிவலப்பாதையில் இருந்த விளம்பர பலகை திடீரென விக்னேஷ் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை, சிகிச்சைக்காக மருத்துவ முகாமுக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு இருந்த ஒரு இரும்புத்தூணை பிடித்ததில், மின்சாரம் தாக்கி இறந்தார். அவரது இறப்புக்கு அரசு நிர்வாகத்தின் கவனக்குறைவும் காரணம். எனவே ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

திருவண்ணாமலை ஒரு புகழ் பெற்ற யாத்திரை தலம். இங்கு ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது நகராட்சி நிர்வாகத்தின் கடமை. ஆனால் கிரிவலப்பாதையில் இருந்த விளம்பரப்பலகை விழுந்ததால்தான் மனுதாரர் மகன் காயம் அடைந்தார்.

பின்னர் மருத்துவ முகாமில் இரும்புத்தூணில் மின்சார கசிவு இருந்துள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும்தான் பொறுப்பு. எனவே இவர்கள்தான் மனுதாரர் மகன் இறப்புக்கு இழப்பீடு வழங்க பொறுப்புடையவர்கள்.

மனுதாரர் மகன் விக்னேஷ், பள்ளிப்படிப்புகளில் நல்ல மதிப்பெண்களை பெற்று, கல்லூரியிலும் சிறந்த மாணவனாக இருந்துள்ளார். இதையெல்லாம் பார்க்கும்போது அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருந்திருக்கும். எனவே அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீட்டுத்தொகையை 4 வாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் 6 சதவீத வட்டியுடன் உரிய தொகையை செலுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story