ரூ.74 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்


ரூ.74 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
x

திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சாலை அமைக்கும் பணி

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சியில் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டிலும், 15-வது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.3 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டிலும் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்றன.

மேலும் அங்கு ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. சன்னதி தெருவில் ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

குடிநீர் இணைப்பு

அதேபோல் ரூ.11 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டிட பழுது நீக்கம் செய்யும் பணி, சமையல் கூடத்தில் ரூ.35 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் கட்டிட பழுதுநீக்கம் செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் கட்டுமான பணிகள், 15-வது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.3 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டில் வீட்டு குடிநீர் குழாய் இணைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

கலெக்டர் ஆய்வு

திருப்புகலூர் ஊராட்சியில் ரூ.10 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணி, அல்லிக்குளத்தில் ரூ.6 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர், படித்துறை கட்டும் பணி, பனங்குடி சமத்துவபுரத்தை புனரமைக்கும் பணி உள்பட ஒன்றியத்தில் மொத்தம் ரூ.73 லட்சத்து 99 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாத்திமா ஆரோக்கியமேரி, ஒன்றிய பொறியாளர் செந்தில், ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story