ரூ.5.74 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்


ரூ.5.74 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்
x

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.74 கோடி வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.74 கோடி வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தக்கலை ஒன்றியத்திற்கு உட்பட்ட முளகுமூடு பேரூராட்சி, திக்கணங்கோடு, முத்தலக்குறிச்சி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் அரவிந்த் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முளகுமூடு பேரூராட்சி பகுதியில் தொகுத்து ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.3.46 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலக பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பணிகளை விரைந்து முடித்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. திக்கணங்கோடு ஊராட்சி பகுதியில் பிரதான் மந்திரி இலவச வீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பயனாளியின் வீட்டின் பணிகள் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.11 லட்சம் மதிப்பில் திக்கணங்கோடு தினசரி சந்தை வளாகத்தில் அலங்கார தரைகற்கள் பதிக்கும் பணிகள் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணியினையும், முத்தலக்குறிச்சி ஊராட்சி பகுதியில் ரூ.45 லட்சம் மதிப்பில் கிராம சேவை மைய கட்டிடம் அருகில் ஆயத்த ஆடை அலகு-2 கட்டுமானப் பணியும் ஆய்வு செய்யப்பட்டது.

ரூ.5.74 கோடி பணிகள்

இதே போல் முத்தலக்குறிச்சி பகுதியில் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வாழை சிப்ஸ் உற்பத்தி பிரிவு கட்டிட பணி, ரூ.23.30 லட்சம் மதிப்பில் வாழை மாவு உற்பத்தி பிரிவு கட்டிடம் கட்டும் பணி என மொத்தம் ரூ.5.74 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் மற்றும் நடைபெறவுள்ள வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, செயற்பொறியாளர் ஏழிசை செல்வி, தக்கலை ஊராட்சி ஒன்றிய தலைவர் அருள் ஆன்றனி, முத்தலக்குறிச்சி ஊராட்சி தலைவர் சிம்சன், உதவி செயற்பொறியாளர்கள் ரெஜினால்டு, மரிய தேவிகா, உதவி பொறியாளர்கள் ஜெனி, ஆனிலெட் ஷீஜா, தக்கலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா ஆறுமுக நயினார், அன்வு, அருளானந்த ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story