விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

குடியாத்தத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

குடியாத்தம் சி.ஐ.டி.யு. விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்க கூட்டுக்குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் போராடி பெற்ற தொழிலாளர் நல சட்டங்களை பாதுகாக்க வேண்டும், இந்திய நாட்டு விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை பாதுகாக்க வேண்டும், 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி 600 ரூபாய் கூலி வழங்கிட வேண்டும், பீடி தொழிலாளர் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரம் பென்ஷன் வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாத்திட வேண்டும். தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத மத்திய அரசின் கொள்கைகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தசரதன், மார்க்கபந்து, அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை விவசாய சங்க மாவட்ட செயலாளர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர் குணசேகரன், பீடி சங்க மாவட்ட குழு உறுப்பினர் சிலம்பரசன், விவசாய சங்க செயலாளர் கோபால், பீடி சங்க தலைவர் மகாதேவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தை சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் காத்தவராயன் முடித்து வைத்தார்.


Next Story