கடம்பூர் கள்ளகாதல் விவகாரத்தில் கத்திக்குத்து -கட்டிட தொழிளாலி பலி


கடம்பூர் கள்ளகாதல் விவகாரத்தில் கத்திக்குத்து -கட்டிட தொழிளாலி பலி
x
தினத்தந்தி 12 Jun 2023 8:03 PM GMT (Updated: 13 Jun 2023 12:12 PM GMT)

கருப்பூர் அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் கத்திக்குத்தியதில் காயம் அடைந்த கட்டிட தொழிலாளி சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

சேலம்

கருப்பூர்

கருப்பூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கத்திக்குத்தில் காயம் அடைந்த கட்டிட தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

கட்டிட தொழிலாளி

சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 34), டிரைவர். இவருடைய மனைவி கார்த்திகா (25). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பாலமுருகனின் நண்பரான அதே ஊரை சேர்ந்த கட்டிட தொழிலாளி மணிகண்டன் (36) என்பவர் பாலமுருகன் வீட்டில் இல்லாத போது அங்கு சென்று கார்த்திகாவை தனிமையில் சந்தித்து பேசி பழகியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் கணவருக்கு தெரிய வரவே அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதில் வெறுப்படைந்த கார்த்திகா, கணவரை விட்டு பிரிந்து அவருடைய கள்ளக்காதலன் மணிகண்டனுடன் கடந்த 2 மாதங்களாக குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது.

கத்தியால் குத்தினார்

இந்த நிலையில், பாலமுருகன் மற்றும் அவருடைய உறவினர்கள் பலர் மணிகண்டனிடம் சென்று தகராறு செய்துள்ளனர். அப்போது பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனின் வயிறு மற்றும் கழுத்து பகுதிகளில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை, கார்த்திகா 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கொடுத்த புகாரின் பேரில், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பாலமுருகனையும் கைது செய்தனர்.

சாவு

இதனிடையே நேற்று சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர் சித்துராஜ் ஆகியோர் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story