வைகை அணை நிரம்பியது; 7 மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்த தண்ணீர்


வைகை அணை நிரம்பியது; 7 மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்த தண்ணீர்
x

வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது, பிரதான 7 மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்தது.

தேனி

வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது, பிரதான 7 மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்தது.

வைகை அணை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது.

இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, மூல வைகை, கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்தும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நீர்வரத்து அதிகரித்து, வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது.

தண்ணீர் திறப்பு

கடந்த வாரம் 60 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 69 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் இன்று காலை அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது.

பொதுவாக வைகை அணையின் முழு கொள்ளளவு 69 அடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்துள்ளதால் வைகை அணையின் நீர்மட்டத்தை 70 அடியாக உயர்த்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி அணையின் நீர்மட்டமும் 70 அடியை எட்டியது.

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்த சில மணி நேரங்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் பிரதான 7 மதகுகள் வழியாக உபரிநீர் சீறிப்பாய்ந்தது.

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

முதற்கட்டமாக வினாடிக்கு 1,190 கன அடி தண்ணீர் வைகை அணையின் பிரதான மதகுகள் வழியாக திறக்கப்பட்டது. அதன்பின்னர் உபரிநீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு வினாடிக்கு 2,650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் தண்ணீர் திறப்பதற்கு முன்னதாக வைகை அணையில் பொருத்தப்பட்டுள்ள அபாய சங்கு 3 முறை சத்தமாக ஒலிக்கப்பட்டது.

இதற்கிடையே வைகை அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதால், உபரிநீர் திறப்பு குறித்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுப்பணித்துறை சார்பில் ஏற்கனவே கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி, உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால் 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story