தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

மழைநீர் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு

அரியலூர் கிருஷ்ணன் கோவில் பின்புறம் கீரைக்காரத்தெருவில் மழை நீர் வடிகால் வாய்க்கால் பல கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் வீதிகளில் பொதுமக்கள் நடந்து செல்வே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், அரியலூர்.

குண்டும், குழியுமான சாலை

அரியலூர் மாவட்டம், சுண்டகுடி கிராமத்தில் உள்ள வல்லகுலம் பஸ் நிலையத்தில் இருந்து சிலப்பனூர் வழியாக காமரசவல்லி வரை சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், சுண்டகுடி

ஏரியில் கலக்கும் கழிவுநீர்

அரியலூர் மாவட்டம், கா. அம்பாபூர் கிராமத்தில் பிடாரி ஏரி ஒன்று உள்ளது. எந்த ஏரியில் உள்ள தண்ணீர் ஊர் பொதுமக்கள் குளிப்பதற்காகவும், கால்நடைகள் தண்ணீர் குடித்தும் பயன்படுத்தி வந்தனர். மேலும் ஊரில் ஏதாவது முக்கிய விஷேச நாட்களில் இந்த ஏரியில் இருந்து தான் பொதுமக்கள் தண்ணீரை எடுத்து சென்று வந்தனர். இந்தநிலையில் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் தற்போது ஏரியில் கலக்கிறது. இதனால் ஏரி தண்ணீர் மாசு அடைந்துள்ளது. மேலும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் ஏரியில் குளிக்கும்போது அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் ஏரியில் உள்ள தண்ணீரை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கா.அம்பாவூர்.

குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், த.சோழன்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்க அப்பகுதியில் உள்ள ஒரு குடிநீர் தொட்டி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் குடிநீர் தொட்டி நீண்ட நாட்களாக சுத்தம் செய்யாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் அதில் உள்ள தண்ணீரை பயன்படுத்த முடியாமல் மாணவ-மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் குடிநீர் தொட்டிக்கான மின் இணைப்பு பெட்டிகளும் பழுந்தடைந்த நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், த.சோழன்குறிச்சி.

கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் சாலைகளில் மாலை நேரத்தில் படுத்து கொள்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், மீன்சுருட்டி.


Next Story