தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

மின்விளக்கு வசதி வேண்டும்

அரியலூர் மாவட்டம் , உடையார்பாளையம் தா.பழூர் ஒன்றியம் , கீழநத்தம் ஊராட்சியில் யாரேனும் இறந்தால் அங்குள்ள மயானத்தில் வைத்து உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் மயானத்தில் மின் விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் உடலை மயானத்திற்கு கொண்டு வருவதும்போது சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

சுதாகர், கீழநத்தம்.

அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா?

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழகவட்டாங்குறிச்சி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் முறையான கழிவறை பராமரிப்பு வசதி இல்லாமல் மாணவர்கள் திறந்த வெயில் சிறுநீர் கழித்து வருகின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் பள்ளிக்கு அடிப்படை வசதி இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், கீழகவட்டாங்குறிச்சி.

போக்குவரத்திற்கு இடையூறு

அரியலூர் பஸ் நிலையத்திலிருந்து பழைய நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் வழியாக தினமும் எண்ணற்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் திருச்சி, தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் செல்கிறது. இந்நிலையில் போக்குவரத்திற்கு இடையூறாக தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் குறிப்பாக மாவட்ட நூலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம், கல்லங்குறிச்சி சாலையில் உள்ள செட்டேரிமேடு ஆகிய பகுதிகளில் சாலையின் குறுக்கே போக்குவரத்திற்கு இடையூராக மாடுகள் கூட்டம் கூட்டமாக நிற்கிறது. சில மாடுகள் சாலையில் படுத்திருப்பது தெரியவில்லை. இதனால் இவ்வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அரியலூர்.

சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து

அரியலூர் மாவட்டம் வி. கைகாட்டியில் உள்ள மண்ணுழி கிராமத்திற்கு செல்லும் பிரிவு சாலைக்கு தென்புறத்தில் ஆபத்தான வளைவு பகுதி உள்ளது. இந்த வளைப்பகுதியில் சாலையோரத்தில் தினமும் கனரக லாரிகள் ஏராளமானவை நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. மேலும் அந்த இடத்தில் எந்த வேகத்தடையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வளைவுபகுதியில் நிறுத்தப்படும் வாகனங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், வி.கைகாட்டி.

குரங்குகள் தொல்லை

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதிகளில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து வீட்டில் உள்ள மளிகை பொருட்கள், தின்பண்டங்கள் உள்ளிட்டவைகளை எடுத்துச்செல்வதுடன் குழந்தைகளை கடிக்க வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பிரபாகரன், செந்துறை


Next Story