தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

வலுவிழக்கும் ஏரிக்கரை

அரியலூர் மாவட்டம், ஆர்.எஸ்.மாத்தூர் அருகில் உள்ள சித்தேரி என்ற ஏரியில் சிலர் வண்டல் மண் எடுப்பதாக கூறி பொக்லைன் எந்திரத்தை கொண்டு, ஏரியின் கரைகளை வெட்டி மண்ணை எடுக்கின்றனர். இதனால் மழைபெய்யும்போது, மழைநீர் ஏரியில் தேங்கி நிற்கும்போது கரை உடைந்து அருகில் உள்ள கிராமங்களில் மழைநீர் புகுந்துவிட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆர்.எஸ்.மாத்தூர்.

குளத்தில் கொட்டப்படும் குப்பைகள்

அரியலூர் மாவட்டம், ஆர்.எஸ்.மாத்தூர் காஞ்சனா குளத்தில் இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், மழைபெய்யும்போது இந்த குப்பைகள் குளத்து நீரில் கலந்து தண்ணீர் மாசடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து காஞ்சனா குளத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மாரிமுத்து, ஆர்.எஸ்.மாத்தூர்.

`தினத்தந்தி' புகார் பெட்டிக்கு நன்றி

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள உஞ்சினி வடக்கு தெருவில் உள்ள குளத்தை தூர் வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமைச்சர் சிவசங்கர் தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தார். ஆனால் அதற்கான பணிகள் நடைபெறவில்லை என்றும், உடனடியாக மழைக்காலத்திற்கு முன்பு பணிகளை தொடங்க வேண்டும் என்றும் தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பணிகளை தொடங்கினர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

கிராம மக்கள், உஞ்சினி.


Next Story