தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

பன்றிகள் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகிறது. இந்த பன்றிகள் அப்பகுதியில் உள்ள குப்பைகளை கிளறி வருகிறது. சில நேரங்களில் வீடுகளுக்குள்ளேயும் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், மேட்டுப்பட்டி.

கொசுக்கள் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை தினமும் ஏராளமான கொசுக்கள் பொதுமக்களை கடித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், உடல்களில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதிகளில் தினமும் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மீனாட்சி சுந்தரம், வலையப்பட்டி.

தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் சுற்றுவட்டார பகுதியான ஒலியமங்களம், எம்.உசிலம்பட்டி, மேலத்தானியம், கீழ தானியம், முள்ளிப்பட்டி, இடையாத்தூர், கொன்னையம்பட்டி, ஆலம்பட்டி, நல்லூர், கூடலூர், அரசமலை, மறவாமதுரை, சேரனூர், நெருஞ்சிகுடி, காரையூர் உட்பட15-க்கு மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குக்கிராமங்கள் அமைந்துள்ளன. எனவே இப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துகளுக்கு பொன்னமராவதி மற்றும் இலுப்பூர் பகுதிகளிலிருந்து தீயணைப்பு வீரர்கள் வரவேண்டி உள்ளது. எனவே இக்கிராமங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் ஏற்படும் தீ விபத்து, பாம்புகளின் தொல்லை, கிணற்றில் ஆடு, மாடுகள் விழுதல் மற்றும் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படும் போது விரைந்து செயல்படுவதற்கு ஏதுவாக காரையூரில் தீயணைப்பு நிலையம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், காரையூர்

இடிந்துவிழும் நிலையில் அங்கன்வாடி மையம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள வெள்ளாள விடுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடத்தில் செயல்படும் இந்த மையத்தில் 30க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து உள்ளது. சுவர்கள் பிளவுபட்டு நிற்கிறது. இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். எனவே இந்த அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டவேண்டும்.

பொதுமக்கள், வெள்ளாள விடுதி.

புகார் பெட்டிக்கு நன்றி

கீரனூரில் உள்ள குளத்தூர் மெயின் சாலையில் மின்கம்பிகள் மரக்கிளைகளில் உரசி வருவதால் அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருதாகவும், மேலும் மின் கம்பிகள் அதிக பாரங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களில் உரசுவதால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு வருதாகவும் இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மரக்கிளைகளை அகற்றியும், தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பிகளை இழுத்துக்கட்டியும் சரி செய்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், கீரனூர்.


Next Story