ஆவின் பாலை நிர்ணயிக்கப்பட்ட விலையை தாண்டி விற்க கூடாது -அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி


ஆவின் பாலை நிர்ணயிக்கப்பட்ட விலையை தாண்டி விற்க கூடாது -அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
x

ஆவின் பாலை நிர்ணயிக்கப்பட்ட விலையை தாண்டி விற்க கூடாது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

கோவை,

பால் சார்ந்த பொருட்களின் தேவை தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா மற்றும் உலகச்சந்தைகளில் அதிகமாக உள்ளது. வரும் காலங்களில் பால் உற்பத்தியை அதிகரிக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் தமிழ்நாட்டின் வருவாயை அதிகரிக்க முடியும். கிராமப்புறத்தில் ஆவின் பால் கொள்முதல் விலையை பொறுத்தவரையில் அனைத்து சீசனிலும் ஒரே சீரான விலையை வழங்கி வருகிறோம். இதனால் இளைஞர்கள் கூட பால் உற்பத்தியாளர்களாக மாறுவதை பார்க்க முடிகிறது.

விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி.யால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கேட்டு வருகிறார்கள். இது முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இந்திய சந்தைகளில் தமிழகத்தின் ஆவின் பால் தான் விலை குறைவாகவும், தரமாகவும் உள்ளது. பால் வினியோகஸ்தர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதில் காலதாமதம் ஏற்படுவது இல்லை. ஆவினை பொறுத்தவரை டீலர்களாக இருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தாண்டி விற்பனை செய்யக்கூடாது. ஆவினில் இடைத்தரகர்கள் எங்கும் கிடையாது. ஆவின் நெய் கள்ள சந்தைகளுக்கு போவதற்கு வாய்ப்பில்லை. ஆவினில் விலை குறைவு என்பதால் தேவைகள் அதிகமாக உள்ளது.

70 லட்சம் லிட்டர்

தனியாரிடம் பால் வழங்குவது விவசாயிகளுக்கு பாதுகாப்பானது அல்ல. விவசாயிகள் பாலை ஆவினுக்கு கொடுப்பது நல்லது. 50 லட்சம் லிட்டர் பாலை கையாளுவதற்கான திறன் நம்மிடம் உள்ளது. அதை 70 லட்சம் லிட்டராக உயர்த்த திட்டமிட்டு உள்ளோம்.

கலப்படம் செய்த தனியார் பால் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. ஏதேனும் புகார்கள் இருந்தால் ஆவின் அலுவலர்கள், மாவட்ட கலெக்டர், உணவு பாதுகாப்பு துறையினரிடம் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story