கள்ளக்காதலியின் தந்தைக்கு கத்திக்குத்து


கள்ளக்காதலியின் தந்தைக்கு கத்திக்குத்து
x

பண்ருட்டி அருகே கள்ளக்காதலியின் தந்தையை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

புதுப்பேட்டை,

கணவருடன் கருத்து வேறுபாடு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கோட்லாம்பாக்கம் புதுத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 56). கூலி தொழிலாளி. இவரது மகள் சுபாஷினிக்கும்(28), வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த மோகன் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சுபாஷினியும், மோகனும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனிடையே சுபாஷினி, திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சென்றார்.

கள்ளக்காதல்

அங்கு அதே கம்பெனியில் பணிபுரிந்த கும்பகோணத்தை சேர்ந்த வெற்றி(30) என்பவருடன் சுபாஷினிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதனிடையே சுபாஷினி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது கணவர் வீட்டிற்கு சென்று விட்டார்.

கத்திக்குத்து

இதையறிந்த வெற்றி நேற்று முன்தினம் மாலை கோட்லாம்பாக்கம் கிராமத்திற்கு வந்து சுபாஷினி எங்கே? என்று கேட்டு சுப்பிரமணியிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் ஆத்திரமடைந்த அவர், கத்தியால் சுப்பிரமணியனின் வயிற்றில் குத்தினார். இதை தடுக்க வந்த சுப்பிரமணியின் மனைவி சத்தியாவதியையும் வெற்றி தாக்கி விட்டு தப்பிச் சென்றார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுப்பிரமணியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றியை தேடி வருகின்றனர்.


Next Story