ஒரு குவிண்டால் பருத்தி ரூ.9,359-க்கு ஏலம்


ஒரு குவிண்டால் பருத்தி ரூ.9,359-க்கு ஏலம்
x

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.9,359-க்கு ஏலம் போனது.

திருவாரூர்

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.9,359-க்கு ஏலம் போனது.

பருத்தி ஏலம்

திருவாரூர் மாவட்டத்தில் 16 ஆயிரம் ஏக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றது. தற்போது பருத்தி பஞ்சுகள் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் மறைமுக ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.

அதன்படி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் பருத்தி பஞ்சுகளை விவசாயிகள் வைத்திருந்தனர். இந்த ஏலத்தில் கும்பகோணம், பண்ருட்டி, செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

ரூ.3½ கோடிக்கு விற்பனை

அதுசமயம் விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை வியாபாரிகள் பார்வையிட்டு, தாங்கள் கேட்கும் தொகையை ஏலச்சீட்டில் எழுதி ஏலப்பெட்டியில் போட்டனர். இதனை தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில், கண்காணிப்பாளர் செந்தில் முருகன், மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர்.

இதில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.9 ஆயிரத்து 359-க்கு ஏலம் போனது. குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரத்து 509, சராசரியாக ரூ.8 ஆயிரத்து 582-க்கு பருத்தி விலை போனது. இந்த ஏலத்தில் மொத்தம் ரூ.3 கோடியே 69 லட்சத்து 32 ஆயிரத்து 203 மதிப்பில் பருத்தி விற்பனையானது.


Next Story