அவமதிப்பு வழக்கு: டாஸ்மாக் கடை நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா?- மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


அவமதிப்பு வழக்கு: டாஸ்மாக் கடை நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா?- மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

டாஸ்மாக் கடை நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்று மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் ஆகியோர், மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களில்,, 21 வயதுக்கு கீழ் உள்ள இளம் தலைமுறையினர், மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். எனவே, தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என குறைக்க உத்தரவிட வேண்டும்.

இதேபோல, 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடை செய்யும் வகையில், மது வாங்குவோருக்கு உரிய அடையாள அட்டை வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தனர்.

இந்த வழக்கை சில மாதங்களுக்கு முன்பு விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், தற்போது இளைய சமுதாயத்தினர் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர்.

பொது நலன் கருதி, மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களைத் தடுக்க, டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை தமிழக அரசு கட்டுப்படுத்தலாம். அரசின் நிர்வாக முடிவில் கோர்ட்டு தலையிட முடியாது என்பது தெரியும். ஆனால், பொது நலன் கருதி சில வழிகாட்டுதல், அறிவுரைகளை வழங்குகிறோம்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை எனக் குறைத்து அரசு அறிவிக்கவேண்டும். இதை மத்திய அரசு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இந்த உத்தரவை 8 மாத காலமாக அமல்படுத்தவில்லை என்றும், இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கே.கே. ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர்.

முடிவில், இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.


Next Story