அரசு கலைக்கல்லூரியில் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு


அரசு கலைக்கல்லூரியில் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு
x

கரூர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகளின் கல்விச்சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.

கரூர்

கலந்தாய்வு

கரூர் அரசு கலைக் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைகான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இக்கல்லூரியில் 1,280 இடங்களுக்கு 7 ஆயிரத்தும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இதனையடுத்து கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 30-ந்தேதி தொடங்கியது. அன்று சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை, விளையாட்டு பிரிவு, மாணவ, மாணவிகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் மாணவர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. கடந்த 2-ந்தேதி இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும், 5-ந்தேதி பி.காம்., பி.காம். சி.ஏ., பி.பி.ஏ. பாடப்பிரிவுகளுக்கும், நேற்றுமுன்தினம் வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.

இந்நிலையில் கரூர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று இயற்பியல், வேதியியல், கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அலெக்சாண்டர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுக்கு 80 இடங்களுக்கும், புள்ளியியல் பாடப்பிரிவுக்கு 40 இடங்களுக்கும், கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கு 100 இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது.

சான்றிதழ் சரிபார்ப்பு

இந்த கலந்தாய்வில் இயற்பியல், வேதியியல், கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கு தனித்தனியாக கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்விற்கு வந்திருந்த மாணவ, மாணவிகளின் கல்வி சான்றிதழ்களை பேராசிரியர்களால் சரிபார்க்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.

இன்று (வியாழக்கிழமை) இளம் அறிவியல் விலங்கியல், தாவரவியல், புவியியல், புவிஅமைப்பியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இளங்கலை மற்றும் இளம்அறிவியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 14-ந்தேதி மற்றும் 16-ந்தேதிகளில் நடக்கிறது.


Next Story