கட்டிட ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை


கட்டிட ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 Sep 2023 8:45 PM GMT (Updated: 7 Sep 2023 8:45 PM GMT)

பொள்ளாச்சி அருகே கட்டிட ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசிடம் சிக்கியது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே கட்டிட ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசிடம் சிக்கியது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கட்டிட ஒப்பந்ததாரர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வடுகபாளையத்தில் உள்ள பசும்பொன் நகரை சேர்ந்தவர் சிவசாமி(வயது 53). கட்டிட ஒப்பந்ததாரர். இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் சிவசாமி, அந்த பகுதியில் சில கட்டுமான பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தார். அதற்கு கட்டுமான பொருட்களை வாங்கி கொடுத்து இருந்தார். ஆனால் கட்டிட உரிமையாளர்கள், அந்த கட்டுமான பொருட்களுக்கு உரிய தொகையை அவருக்கு கொடுக்கவில்லை என தெரிகிறது.

தற்கொலை

இதற்கிடையில் கட்டுமான பொருட்களை கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் அவர் மிகுந்த மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சிக்கல் தொடரவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிவசாமி நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார், விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம் சிக்கியது

மேலும் அவரது வீட்டில் சோதனையிட்டபோது, சிவசாமி எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அதில், ஒரு தனியார் பேக்கரி உரிமையாளர் உள்பட 3 பேரின் பெயரை குறிப்பிட்டு இருந்ததோடு கட்டிட வேலை செய்ததற்கு அவர்கள் பணம் தராததால் தற்கொலை முடிவை எடுத்து உள்ளேன். அந்த தொகையை மீட்டு எனது குடும்பத்தின் கஷ்டத்தை போக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story