பா.ஜ.க.வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க.வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

பா.ஜ.க.வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

ராகுல்காந்தியை அவதூறாக விமர்சித்து வரும் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடியை கண்டித்து நேற்று திருச்சி உய்யகொண்டான் கரை குழுமாயி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் திருச்சி கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்ேடார் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பா.ஜ.க.வை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், வடக்கு மாவட்ட தலைவர் கலை, கவுன்சிலர்கள் ரெக்ஸ், சோபியா விமலா ராணி, மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பேட்ரிக் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் திருநாவுக்கரசர் எம்.பி., நிருபர்களிடம் கூறுகையில், ராகுல் காந்தி பெயரை கூறவே பா.ஜ.க.வினர் பயப்படுகிறார்கள். அவரது செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் அறிவித்து வருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் ராகுல் காந்தி மீது அவதூறு பரப்பி வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக செயல்படும் கட்சிகளை மத்திய அரசின் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்றவற்றின் மூலம் சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. வருகிற 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பெறும் வெற்றி, 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பார், என்றார்.


Next Story