ஏல சீட்டு நடத்தி ரூ. 17 லட்சம் மோசடி


ஏல சீட்டு நடத்தி ரூ. 17 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 31 Aug 2023 6:45 PM GMT (Updated: 31 Aug 2023 6:45 PM GMT)

கடலூர் முதுநகரில் ஏல சீட்டு நடத்தி மோசடி செய்யப்பட்ட ரூ.17 லட்சத்தை மீட்டுத்தரக்கோரி பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தனர்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் சுத்துகுளம் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் கடலூர் முதுநகர் போலீஸ் நிலைத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில், தங்கள் பகுதியில் வசித்த இன்பராஜ் மனைவி லட்சுமி தேவி என்பவர் கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஏல சீட்டு நடத்தி வந்தார். நாங்கள் அவரிடம் பல தவணைகளில் பணம் கட்டி வந்தோம். இவ்வாறாக எங்களிடம் மொத்தம் ரூ.17 லட்சம் அவர் வசூல் செய்துள்ளார். இந்த நிலையில் திடீரென லட்சுமிதேவி வெளியூர் சென்று விட்டார். இதையடுத்து லட்சுமிதேவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு எங்களது பணம் குறித்து கேட்டபோது, நான் எந்த பணமும், யாரிடமும் வசூலிக்கவில்லை.

அதனால் பணம் எதுவும் தர முடியாது எனக்கூறி மிரட்டுகிறார். எனவே எங்களிடம் லட்சுமி தேவி வசூல் செய்த ரூ.17 லட்சம் மற்றும் 1 பவுன் நகையை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story