புகார்பெட்டி


புகார்பெட்டி
x
தினத்தந்தி 20 Nov 2022 6:45 PM GMT (Updated: 20 Nov 2022 6:46 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

சேதமடைந்த சாலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா தஞ்சாக்கூர் கிராமத்திலிருந்து விளத்தூர் வழியாக கட்டிக்குளம் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். மேலும் போக்குவரத்து வசதி இல்லாததால் சைக்கிளில் செல்லும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சிவகங்கை.

வாகனஓட்டிகள் அவதி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு இடையே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் வாகனஓட்டிகள் அவ்வப்போது சிறு, சிறு விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவிக்குமார், திருப்புவனம்.

விபத்து அபாயம்

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் நுழைவு வாயில் சேதமடைந்து உள்ளது. மேலும் மேற்கூரை பெயர்ந்து உள்ளே உள்ள கம்பிகள் தெரிந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே இதை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சிவகங்கை.

நாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களின் மீது நாய்கள் குறுக்கிடுவதால் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. எனவே இந்த நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திக், இளையான்குடி.

செய்தி எதிரொலி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மறவமங்கலம் நெடுஞ்சாலையில் கீழத்துறையூரில் வேகத்தடை அமைக்க வேண்டி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. தற்போது அதன் பயனாக சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. எனவே நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து கொள்கின்றனர்.

சுப்பிரமணியன், சிவகங்கை.


Next Story