புகார்பெட்டி


புகார்பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

வரத்து கால்வாய் சீரமைக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரில் தற்போது பெய்து வரும் மழையால் நீர்நிலைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. பருவ மழை தொடங்கும் முன்னர் கண்மாய்களுக்கு வரும் வரத்துகால்வாய்களை சீரமைக்க வேண்டும்.

உமா, எஸ்.புதூர்.

அறிவிப்பு பலகை தேவை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து மதுரை மேலூருக்கு புதிதாக வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலை நடப்பதை வாகனஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் எந்தவித அறிவிப்பு பலகையும் இப்பகுதியில் அமைக்கப்படவில்லை. இதனால் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியாக இந்த சாலை உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த சாலையில் எச்சரிக்கை பலகை அமைத்து வேலை செய்ய வேண்டும்.

சந்திரன், காரைக்குடி.

வாகன ஓட்டிகள் சிரமம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போலீஸ் காலனி மேற்கு பகுதி அண்ணா நகர் பிரதான சாலையை இணைக்கும் வாய்க்கால் உடைந்து மழை நீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்கும் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்துல், காரைக்குடி.

கண்மாய் ஆக்கிரமிப்பு

சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் கிராமத்தில் உள்ள காராகுளத்தின் நீரை இப்பகுதி பொதுமக்கள் பலவகைகளில் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த கண்மாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

பொதுமக்கள், படமாத்தூர்.

தொற்று நோய் அபாயம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நகர் சாலையோரங்களில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

செழியன், சிங்கம்புணரி.


Next Story