பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள்


பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள்
x
தினத்தந்தி 28 Jun 2023 6:45 PM GMT (Updated: 29 Jun 2023 11:42 AM GMT)

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற்றன.

சிவகங்கை

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற்றன.

மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள்

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் சிவகங்கை மாவட்ட அளவில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கில் சிவகங்கை மாவட்ட தமிழ்வளர்ச்சி உதவி இயக்குனர் நாகராசன் தலைமையில் நடைபெற்றன. இப்போட்டிகளை சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார். போட்டிகளில் 160 மாணவர்கள் பங்கேற்றனர்.

கவிதை போட்டியில் சூராணம், புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி சண்முகபிரியா முதல் பரிசையும், சூசையப்பர்பட்டணம் சகாயராணி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி கவுசிகா இரண்டாம் பரிசையும், தேவகோட்டை பெத்தாள் ஆச்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

பரிசு தொகை

கட்டுரை போட்டியில் கீழக்கண்டணி அரசு மாதிரிப்பள்ளி மாணவர் அஜய்குமார் முதல் பரிசையும், காரைக்குடி வித்யாகிரி பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவர் ராகுல் 2-ம் பரிசையும், சிவகங்கை புனித ஜஸ்டின் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சுவேதா 3-ம் பரிசையும் பெற்றனர். பேச்சு போட்டியில் காரைக்குடி வித்யாகிரி பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரபாகரன் முதல் பரிசையும், திருப்புவனம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பார்கவி 2-ம் பரிசையும், காரைக்குடி மகரிஷி வித்யாமந்திர் பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவர் சேதுராமன் 3-ம் பரிசையும் பெற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசு தொகையாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசுத் தொகையாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசு தொகையாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. விழா ஏற்பாடுகளை அலுவலர்கள் சிராஜூதீன், முனியசாமி, கார்த்திகை ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story