செஞ்சி அருகே பரிதாபம் திருமணமான ஒரே மாதத்தில் கல்லூரி மாணவி திடீர் சாவு பாஸ்தா சாப்பிட்டதால் இறந்தாரா? போலீசார் விசாரணை


செஞ்சி அருகே பரிதாபம்    திருமணமான ஒரே மாதத்தில் கல்லூரி மாணவி திடீர் சாவு    பாஸ்தா சாப்பிட்டதால் இறந்தாரா? போலீசார் விசாரணை
x

செஞ்சி அருகே திருமணமான ஒரே மாதத்தில் கல்லூரி மாணவி திடீரென உயிரிழந்தார். அவர் பாஸ்தா உணவை சாப்பிட்டதால் உயிரிழந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விழுப்புரம்

செஞ்சி,

காதல் திருமணம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகள் பிரதீபா(வயது 22). விழுப்புரம் பகுதியில் உள்ள ஒரு கலைக்கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இவரும் அதே ஊரை சேர்ந்த சரவணன் மகன் விஜயகுமார்(22) என்பவரும் காதலித்து கடந்த மாதம் 13-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் சென்ற கணவன்-மனைவி இருவரும் அங்குள்ள ஒரு ஓட்டலில் பாஸ்தா உணவை பார்சல் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் பாஸ்தாவை சாப்பிட்டனர். அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் பிரதீபாவுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதைபார்த்த விஜயகுமார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிரதீபாவை சிகிச்சைக்காக அதே ஊரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பிரதீபா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சாவில் சந்தேகம்

இதுபற்றி தகவல் அறிந்த பழனிவேல் தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக கஞ்சனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து பாஸ்தா உணவை சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக பிரதீபா இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் கல்லூரி மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story