கலெக்டர் அலுவலகம் முற்றுகை


கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 7 Oct 2023 8:00 PM GMT (Updated: 7 Oct 2023 8:01 PM GMT)

கோவையில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து, உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து சிறுவனின் குடும்பத்துக்கு அமைச்சர் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கினார்.

கோயம்புத்தூர்

கோவையில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து, உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து சிறுவனின் குடும்பத்துக்கு அமைச்சர் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கினார்.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

கோவை வேடப்பட்டி சாலை நாகராஜபுரம் அன்னை சத்தியா நகரை சேர்ந்தவர் கார்த்திக். கட்டிட தொழிலாளி. இவருடைய மகன் குகன்ராஜ் (வயது 6). விளையாட சென்ற சிறுவன், ஆரம்ப பள்ளி கட்டிட பணிக்காக வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்து கிடந்தான்.

இந்த நிலையில் தண்ணீர் தொட்டியை சரிவர மூடாதது தான் விபத்துக்கு காரணம் என்றும், சிறுவனின் சாவுக்கு நீதி கேட்டும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிறுவனின் சாவு குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ரூ.2 லட்சம் நிவாரண நிதி

இதுபற்றிய தகவல் அறிந்ததும், கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அமைச்சர் முத்துசாமி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் முத்துசாமி, தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.1 லட்சமும், மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.50 ஆயிரம், மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சம் நிவாரண நிதியை வழங்கினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story