விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு குறித்து கலெக்டர் ஆலோசனை


விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு குறித்து கலெக்டர் ஆலோசனை
x

விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு குறித்து அரசு அலுவலர்களுடன் கலெக்டர் கார்மேகம் ஆலோசனை நடத்தினார்.

சேலம்

விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு குறித்து அரசு அலுவலர்களுடன் கலெக்டர் கார்மேகம் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

இதில் விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகளை நிறுவுதல் மற்றும் ஊர்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:- விநாயகர் சிலை அமைப்பாளர்கள் சிலைகள் நிறுவுவதற்கு மாநகராட்சி பகுதியில் போலீஸ் உதவி கமிஷனர்களிடமும், ஊரக பகுதிகளில் உதவி கலெக்டர்களிடமும் உரிய அனுமதி பெற்று வைக்க வேண்டும்.

களிமண்ணால் இருக்க வேண்டும்

விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் இருக்க வேண்டும். சிலைகள் நீர்நிலைகளை மாசுபடுத்தாத இயற்கை வண்ணங்களை மட்டுமே பூசப்பட்டிருக்க வேண்டும்.

ரசாயன வர்ண பூச்சு மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்றவற்றால் ஆன சிலைகளை பயன்படுத்தக்கூடாது. பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளின் உயரம் பீடம் மற்றும் மேடையுடன் சேர்த்து அதிகபட்சம் 10 அடிக்கு மேலாக இருக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பட்டாசு வெடிக்க கூடாது

விநாயகர் சதுர்த்தி விழாவில், தொடர்புடைய அமைப்பினரால் நிறுவப்படும் ஒவ்வொரு சிலைக்கும் 24 மணி நேரமும் பாதுகாப்பிற்கு பொறுப்பு ஏற்கும் வகையில் பொறுப்பாளர்களை நியமித்திட வேண்டும். விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்கும் சிலைகள், போலீஸ் துறையால் அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே செல்ல வேண்டும். ஊர்வலத்தில் பட்டாசு வெடிகள் போன்றவைகளை உபயோகிக்க கூடாது. அனுமதிக்க கூடாது

போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் எக்காரணத்தைக் கொண்டும் ஊர்வலம் செல்ல அனுமதிக்க கூடாது. நான்கு சக்கர வாகனங்களான மினி லாரி, டிராக்டர் போன்றவற்றில் மட்டுமே சிலைகள் எடுத்துச் செல்லப்பட வேண்டும். மாட்டு வண்டி, 3 சக்கர வாகனங்களில் சிலைகளை எடுத்து செல்லக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் அலர்மேல் மங்கை, போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன், மாவட்ட வருவாய் அலுவலார் மேனகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story