தளி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்-கலெக்டர் நேரில் ஆய்வு


தளி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்-கலெக்டர் நேரில் ஆய்வு
x

தளி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4 கோடியே 76 லட்சத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தளி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4 கோடியே 76 லட்சத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் ரூ.4 கோடியே 76 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் திட்ட ்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தளி ஊராட்சி ஒன்றியம் கலுகொண்டப்பள்ளி ஊராட்சியில் ரூ.19 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுமான பணிகளையும், ரூ.73 லட்சம் மதிப்பில் மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம் கட்டுமான பணிகளையும், ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டுமான பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

தரமாக முடிக்க உத்தரவு

மேலும் ஜாகீர்கொடிப்பள்ளி ஊராட்சியில் ரூ.17 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பில் நடுநிலைப்பள்ளி கட்டிடம் கட்டுமான பணிகளையும், மதகொண்டப்பள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பில் ஏரிகால்வாய் தூர்வாரும் பணிகளையும், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் தொகுப்பு வீடுகள் கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

தொடர்ந்து ரூ.3 கோடியே 25 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் தளி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டுமான பணிகளையும், ஜவளகிரி ஊராட்சி, பீமசந்திரம் கிராமத்தில் ரூ.10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிட கட்டுமான பணிகள் என மொத்தம் ரூ.4 கோடியே 76 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

உத்தரவு

இந்த பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிக்குமார், பானுமதி, ஒன்றிய பொறியாளர் மணிவண்ணன், ஒன்றிய மேற்பார்வையாளர்கள் லட்சுமணன், நஞ்சாரெட்டி, இம்தியாஸ்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story