நாமக்கல்குறைதீர்க்கும் கூட்டத்தில் 427 மனுக்கள் குவிந்தனநலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்


நாமக்கல்குறைதீர்க்கும் கூட்டத்தில் 427 மனுக்கள் குவிந்தனநலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 31 July 2023 7:00 PM GMT (Updated: 31 July 2023 7:00 PM GMT)
நாமக்கல்

நாமக்கல்லில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 427 மனுக்கள் குவிந்தன. 4 பயனாளிகளுக்கு ரூ.26 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடந்தது.

இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசைமாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 427 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து சமூக நலத்துறையின் சார்பில் தலா ரூ.5,350 வீதம் ரூ.10 ஆயிரத்து 700 மதிப்பில் 2 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் எந்திரம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.9,050 மதிப்பில் ஒரு மூன்று சக்கர சைக்கிள், ரூ.6,450 மதிப்பில் ஒருவருக்கு மடக்கு சக்கர நாற்காலி என மொத்தம் 4 பயனாளிகளுக்கு ரூ.26 ஆயிரத்து 200 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story