கோவை: திருமணம் நிச்சயிக்கப்பட்ட போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை...!


கோவை: திருமணம் நிச்சயிக்கப்பட்ட போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை...!
x

கோவையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பருத்தியூரை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மகன் மணியரசு(வயது 36). இவர் கடந்த 2013-ம் ஆண்டு போலீசில் பணியில் சேர்ந்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக கோமங்கலம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் மணியரசுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வருகிற 1-ந்தேதி நடக்க இருக்கும் திருமணத்திற்கு பத்திரிக்கை அச்சடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் திடீரென்று மணியரசு தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. வீட்டில் உள்ளவர்கள் அவரை சமாதானம் செய்த போது, இரவு பணிக்கு சென்று விட்டு வந்து சொல்வதாக கூறி விட்டு சென்றார். இதையடுத்து இன்று காலையில் பெற்றோர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் மணியரசு செல்போனை எடுக்கவில்லை.

இதை தொடர்ந்து பெற்றோர்கள் கோமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அவரை தேடி வந்தனர். ஆனால் அவர் இங்கு இல்லாததால், பணியில் இருந்த போலீசார் அவரது செல்போனை தொடர்பு கொண்டும் எடுக்கவில்லை. அவர் அருகில் உள்ள போலீஸ் குடியிருப்பிற்கு சென்று ஓய்வு எடுப்பது வழக்கம். இதனால் சந்தேகத்தின் பேரில் போலீசார், பெற்றோருடன் அங்கு சென்று பார்த்த போது, கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.

போலீசார் தட்டி பார்த்தும் கதவை திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது மின்விசிறி பொருத்தும் கம்பியில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மணியரசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்து உள்ளது. இதற்கிடையில் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்வதற்கு அவர் சம்மதம் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று அவருக்கு பிறந்த நாள் என்பதால் விடுமுறை எடுத்து உள்ளார். மேலும் வீட்டில் பெற்றோருடன் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

அதற்கு பெற்றோர் உன் விருப்பத்தின் பேரில் தான் அந்த பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. அந்த பெண்ணை தான் திருமணம்செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


Next Story