மாமல்லபுரத்தில் டிக்கெட் கவுண்டர்கள் மூடல்.. வெளிநாட்டு பயணிகள் நடு ரோட்டில் காத்திருப்பு


மாமல்லபுரத்தில் டிக்கெட் கவுண்டர்கள் மூடல்.. வெளிநாட்டு பயணிகள் நடு ரோட்டில் காத்திருப்பு
x

மாமல்லபுரத்தில் உள்ள டிக்கெட் கவுண்டர்கள் மூடியதால் வெளிநாட்டு பயணிகள் கையில் இந்திய ரூபாய் இருந்தும் டிக்கெட் எடுக்க முடியாமல் திணறினர்.

செங்கல்பட்டு

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை அருகில் சென்று பார்ப்பதற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 600 ரூபாயும், இந்திய சுற்றுலா பயணிகளிடம் 40 ரூபாயும் தொல்லியல்துறை கட்டணமாக வசூலித்து வருகிறது. நுழைவு சீட்டை ஆன்-லைன் வழியாகவும், கவுண்டரில் பணம் செலுத்தி வாங்கும் விதிமுறை இருந்து வந்தது.

இந்நிலையில் திடீரென பிரிண்ட் பேப்பர் இல்லை என்று கூறு தொல்லியல்துறை ஊழியர்கள் டிக்கெட் கவுண்டரை பூட்டினார்கள். இதனால் அங்கு காத்திருந்த உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஆன்லைன் டிக்கெட் மொபைல் போனில் எடுக்க தெரியாத கிராமப்புற பயணிகள் ஏக்கத்துடன் வெளியே நின்று பார்த்துவிட்டு திரும்பினார்கள்.

வெளிநாட்டு பயணிகள் கையில் இந்திய ரூபாய் இருந்தும் டிக்கெட் எடுக்க முடியாமல் திணறினர். அவர்களின் வங்கி கணக்கில் இருக்கும் அவர்கள் நாட்டு பணத்தை இந்திய ரூபாயாக மாற்றி ஆன்லைன் டிக்கெட் எடுக்க மணிக்கணக்கில் ரோட்டில் காத்திருந்தனர். இதை சாதகமாக பயன்படுத்தி சிலர் பயணிகளிடம் டிக்கெட்களை அதிக விலைக்கு விற்றதாகவும் கூறப்படுகிறது.

டிக்கெட் கவுண்டரை மீன்டும் திறந்து நுழைவு சீட்டு கொடுக்க வேண்டும் என சுற்றுலா வழிகாட்டிகளும், சுற்றுலா ஆர்வலர்களும் மாமல்லபுரம் தொல்லியல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். பேப்பர் ரோல் தட்டுப்பாடு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக மாமல்லபுரம் தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Next Story