செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை திட்டப்பணிகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு


செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை திட்டப்பணிகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை திட்டப்பணிகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு

வேளாண்மை திட்டப்பணிகளில் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை தலைமை செயலாளர் வெ.இறையன்பு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மதுராந்தகம் வட்டாரத்தைச் சேர்ந்த கோடித்தண்டலம் கிராமத்தில் 2021-22-ம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தரிசு நில மேம்பாட்டுத் தொகுப்பை அவர் ஆய்வு செய்தார். இந்த தொகுப்பில் மா, கொய்யா மற்றும் சப்போட்டா ஆகிய 1,450 பழமரக்கன்றுகள் சாகுபடி செய்ததையும், இரண்டு எண்கள் சூரியசக்தி மோட்டார் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

அப்போது விவசாயிகள் தாங்கள் 40 ஆண்டு காலமாக எந்த வித பயிர் சாகுபடியும் செய்யவில்லை என்றும், தற்போது நல்ல நீர்வசதி உள்ளதால் பழ மரக்கன்றுகளை நடவு செய்து பாதுகாத்து வருவதாக தெரிவித்தார்கள். அப்போது, பழ மரக்கன்றுகளை பராமரித்தல் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

விளைபொருட்கள் ஏலத்துக்கு முன்பாக...

பின்னர் பள்ளியகரம் கிராமத்தில் துரைராஜ் என்ற விவசாயி நிலத்தில் முதல் முறையாக 3.5 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள நிலக்கடலை விதைப்பண்ணையை தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார். நிலக்கடலை செடிகளை நிலத்தில் இருந்து எடுத்து அதில் அதிக அளவில் திரட்சியான காய்கள் இருந்ததைகண்டு ஆச்சரியமடைந்தார். மிகவும் நேர்த்தியாக சாகுபடி செய்து வருவதாக விவசாயியை பாராட்டினார்.

அடுத்ததாக, துறையூர் கிராமத்தில் லட்சுமிபதி என்பவரது நிலத்தில் சொட்டு நீர் பாசனத்துடன் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு பயிரை ஆய்வு செய்தார்.

பின்னர் மதுராந்தகம் ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் தொடர் சங்கிலி மேலாண்மை திட்டத்தில் ரூ 3.90 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது. சூரிய மின் வசதி அமைத்து பயன்படுத்துவதால் மின்கட்டணம் வெகுவாக குறைந்திட வாய்ப்புள்ளது என ஆலோசனை வழங்கினார்.

பிறகு, விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகளான டிராக்டர், பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் போன்றவற்றை வழங்கினார். பின்னர், தேசிய வேளாண் சந்தைப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது இணையதளத்தில் விளைபொருட்கள் ஏலம் நடைபெறுவதற்கு முன்னர் கல், மண், தூசி, ஈரப்பதம் குறித்த பவுதீக ஆய்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

காளான் உற்பத்தி மையத்தில்...

இறுதியாக, அச்சரப்பாக்கம் பள்ளிப்பேட்டை கிராமத்தில் அரசு மானிய உதவியுடன் பால் காளான் உற்பத்தி செய்து வரும் தன்ராஜ் என்பவரது காளான் உற்பத்தி மையத்தை தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார். அவரிடம், அரசு பங்களிப்பு மானியம் குறித்தும், காளான்கள் எவ்வாறு விற்பனை செய்யப்படுகிறது? என்பதையும் அவர் கேட்டறிந்தார். உற்பத்தி மையம் சென்னைக்கு அருகே அமைந்திருப்பதால் காளான்களை நல்ல விலைக்கு விற்பனை செய்திட வாய்ப்புள்ளதால், இதனை நன்கு பயன்படுத்தி முன்னேறிட வேண்டும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, தோட்டக்கலை இயக்குனர் பிருந்தா தேவி, வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை இயக்குனர் நடராஜன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story