மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.48 கோடி செலவில் புதிய கட்டடங்கள் - முதல்-அமைச்சர் திறந்து வைப்பு


மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.48 கோடி செலவில் புதிய கட்டடங்கள் - முதல்-அமைச்சர் திறந்து வைப்பு
x
தினத்தந்தி 21 Oct 2022 9:05 AM GMT (Updated: 21 Oct 2022 9:06 AM GMT)

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.48 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விடுதி மற்றும் நூலக கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

சென்னை:

தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட, புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவக் கருவிகளை நிறுவுதல், போன்ற பல்வேறு திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வாயிலாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 48 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான இரண்டு கூடுதல் விடுதிக் கட்டடங்கள், மாணவியர்களுக்கான இரண்டு கூடுதல் விடுதிக் கட்டடங்கள் மற்றும் நூலகக் கட்டடம் ஆகிய கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 12.27 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 144 அறைகளைக் கொண்ட கூடுதல் விடுதிக் கட்டடம், இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர்கள் தங்கும் வகையில் 8.60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 174 அறைகளைக் கொண்ட கூடுதல் விடுதிக் கட்டடப்பட்டுள்ளது. இதுபோன்று மாணவியர்கள் தங்கும் வகையில், 9.38 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 68 அறைகளைக் கொண்ட கூடுதல் விடுதி பகுதி-I கட்டடம் மற்றும் 9.12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 44 அறைகளைக் கொண்ட கூடுதல் விடுதி பகுதி-II கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

மேலும் இக்கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர் நூல்களைப் படித்து பயன்பெறும் வகையில் 4,000 சதுர மீட்டர் பரப்பளவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 8.62 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டடம்; என மொத்தம் 48 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டால்இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்திலிருந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ப. செந்தில்குமார், மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் ஆர். சுகந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதுரையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, மு.பூமிநாதன், ஏ. வெங்கடேசன், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி மேயர் வி. இந்திராணி பொன்வசந்த், மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஏ. ரத்தினவேல் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story