சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம்: 8 மணி நேரத்தில் சென்றடைந்தது


சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம்: 8 மணி நேரத்தில் சென்றடைந்தது
x

சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ரெயில் 8 மணி நேரத்தில் நெல்லை ரெயில்நிலையம் சென்றடைந்தது.

சென்னை,

தெற்கு ரெயில்வேயில் சென்னை - மைசூர், சென்னை - கோவை, திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே தலா ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. அதன்படி, நெல்லை-சென்னை இடையே வரும் 24-ந்தேதி முதல் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வந்தே பாரத் ரெயில் சேவையை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் நெல்லை சந்திப்பு ரெயில்நிலையத்தில் நடந்து வருகிறது.

8 பெட்டிகள்

நெல்லை-சென்னை இடையிலான வந்தே பாரத் ரெயில் மொத்தம் 8 பெட்டிகள் கொண்டது. நாள்தோறும் காலை 6 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு எழும்பூர் வந்தடையும். அதேபோல, எழும்பூரிலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லை சென்றடையும். வாரத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினம் மட்டும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படாது.

சோதனை ஓட்டம்

இந்த நிலையில், நெல்லை-சென்னை இடையே இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. அந்த வகையில், வந்தே பாரத் ரெயில் நேற்று காலை 5.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு நெல்லை சென்றது. இந்த ரெயிலில் தெற்கு ரெயில்வே அதிகாரிகளும், தொழில்நுட்ப வல்லுனர்களும் சென்றனர். காலை 7.30 மணிக்கு விழுப்புரத்திற்கு சென்றடைந்த நிலையில் அங்கு 2 நிமிடம் பயணிகளின் பார்வைக்காக நிறுத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக பிற்பகல் 1.45 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் சென்றடைந்தது.

நீல நிற வந்தே பாரத் ரெயில்

ரெயில்வே வாரியத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப வந்தே பாரத் ரெயில்கள் தற்போது நீல நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, நெல்லை - சென்னை இடையே ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையிலிருந்து நீல நிற வந்தே பாரத் ரெயில் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால், நெல்லை - சென்னை இடையே நீல நிற வந்தே பாரத் இயக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story