சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து


சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து
x
தினத்தந்தி 21 Sep 2024 7:46 AM GMT (Updated: 21 Sep 2024 9:16 AM GMT)

பராமரிப்புப் பணிகள் காரணமாக ரெயில் சேவை ரத்துசெய்யப்படுகிறது.

சென்னை,

சென்னையில் பொது போக்குவரத்தில் மின்சார ரெயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் ஏராளமான மக்கள் இந்த மின்சார ரெயில் சேவையை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்வோர் என இந்த ரெயில் சேவையை நம்பியுள்ளனர்.

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவை அவ்வப்போது குறிப்பிட்ட வழித்தடங்களில் முழுவதுமாக அல்லது பகுதியாக ரத்து செய்யப்படுவது வழக்கம். அதன்படி, தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரெயில் சேவையில் நாளை (22ம் தேதி) மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, சென்னை தாம்பரம் - கடற்கரை வரையிலான மின்சார ரெயில் சேவை நாளை (செப்.22) காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. மேலும், பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை - பல்லாவரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் எனவும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.





Next Story