கோடை மழையால் ரசாயன உப்பு உற்பத்தி பாதிப்பு


கோடை மழையால் ரசாயன உப்பு உற்பத்தி பாதிப்பு
x

கோடை மழையால் ரசாயன உப்பு உற்பத்தி பாதிப்பு

தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில் கோடை மழையால் ரசாயன உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாத்திகளில் உப்புகள் கரைந்து வீணாகும் நிலை உள்ளது.

ரசாயன உப்பு

தஞ்சை மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியும் முக்கிய தொழில் ஆகும்.

தஞ்சை கடற்பகுதியான அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பளங்கள் உள்ளன. இங்கு ரசாயன உப்பு, உணவு உப்பு ஆகிய 2 விதமான உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஜனவரி மாதம் பாத்தி சீரமைத்தல், வரப்பு போடுதல், கடல் வாய்க்கால் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. இதையடுத்து மார்ச் மாதம் உப்பு உற்பத்தி தொடங்கியது.

இதில் உற்பத்தி செய்யும் உணவு உப்பு மற்றும் ரசாயன உப்பு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி, சென்னை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள உப்பு ஆலைகளில் மேன்மைப்படுத்தப்பட்டு அங்கிருந்து பிற தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

உப்பு உற்பத்தி பாதிப்பு

இந்த ரசாயன உப்பு உரம் தயாரிக்கவும், சோப்பு, சோடா, பானம், வீடு சுத்தம் செய்யும் ஆசிட் தயாரிக்க பயன்படுத்தப்படுவதால் அந்தந்த தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக அதிராம்பட்டினம் கடற்பகுதியில் விட்டுவிட்டு பெய்த கோடை மழையினால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாரப்பட்ட உப்புகள் பாத்திகளில் மழைநீரில் கரைந்து வீணாகி வருகிறது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உப்பு உற்பத்தியாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.

இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் இந்த தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர். தற்போது 500 ஏக்கருக்கு குறைந்த அளவு பரப்பிலான பகுதிகளில் மட்டுமே உப்பு உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது.

உப்புகள் கரைந்து வீணாகும் அவலம்

இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர் சண்முகம் கூறுகையில், உப்பள பாத்திகளில் மழைநீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. மழையால் பாத்திகளில் உற்பத்தியான உப்புகள் கரைந்து வீணாகி போகிறது.

மேலும் பாத்திகளில் இருந்து பிரித்தெடுத்து லாரியில் ஏற்றி அனுப்புவதற்காக குவித்து வைத்த உப்பும் மழை நீரில் கரைந்து வீணா கிறது. இதனால் மழையால் உப்பள பாத்திகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் வருமானம் இழந்துள்ளனர். தஞ்சை மாவட்ட கடலோர பகுதியில் உப்பளத்தொழில் நலிவடைந்த நிலையில் உள்ளூர் உப்பளத்தொழிலாளர்கள் வேறு தொழிலுக்கு சென்றுவிட்டதால் குறைந்த அளவே உப்பளத்தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.


Next Story